Friday, August 14, 2009

நான்

நான்
அற்பமான இந்த புத்தியுமல்ல,
பெருமை மிக்க இந்த பகுத்தறிவுமல்ல,
யானையைப் போன்ற ஆணவமும் அல்ல,
இந்தக் கணத்தில் எழுகின்ற எண்ணமும் அல்ல,
தொடுதலும்,பார்த்தலும்,கேட்டலும்,சுவைத்தலும் ஆன
இந்தப் புலன்களும் அல்ல,
நான் பஞ்சபூதங்களின் தன்மையும் அல்ல,
நான் சத்தியம்,விழிப்பு,ஏகாந்தம்,
நானே சிவம்,சிவம் நானே.

Tuesday, April 7, 2009

நானும் ஸ்பைடர்மேனும்

ஓ, ஸ்பைடர்மேன்,
பிள்ளைப் பிராயத்திலிருந்தே
என் பிரியமான பிரமிப்பு நீ.

என் பால்யகாலப் பொழுதுகளின்
ஞாயிற்றுக்கிழமை மாலைகளில்
உன் தொலைக்காட்சி சாகசங்களுக்காய்
எதிர்பார்த்துக் காத்திருந்த
நாட்கள் ஏராளம்.

உன்னைப் போல் ஆவதெப்படி
என்று
உன்மத்தமாய் யோசித்த நாட்கள்
நிறையவே உண்டு.

உனக்கும் எனக்குமாய்
ஆறு முதல் அளப்பரிய வித்தியாசங்கள்
தேடித் தேடித்
அயர்ந்து போயிருக்கிறேன்.

விழுது பிடித்து ஆடும்போதெல்லாம்
விழுதின் உச்சி
வேறொரு மரம் பற்றிக்கொள்ளாதா என்று
விளையாட்டாய் யோசித்ததுண்டு.

சிலந்திப் பூச்சி பார்க்கும்போதெல்லாம்
இந்தச் சிலந்தி
உன்னைப் போல்
என்னையும் மாற்றாதா என்று
தொழுத நாட்கள் இங்கு
எழுத இயலாது.


என் யெளவன நாட்களில்
உன்னைப் போல் இருந்திருந்தால்
எத்தனை பெண்கள்
என்னைக் காதலித்திருக்ககூடும்
என்று ஏகாந்தமாய்
யோசித்த நிமிடங்கள்
நிறையவே உண்டு.

ஆனால் எப்போதும் தாமதமாய்
வரும் புரிதலைப் போல,
இந்த நடுத்தர வயதில் புரிகிறது.
நீயும் நானும்
ஒன்று தான் என்று.

"உண்மையில்
வாழ்க்கையின் மிகப்பெரிய
போராட்டங்கள்
நம்முள்ளேயே நிகழவேண்டியிருக்கிறது"
என்ற புரிதலில்
நீயும் நானும்
ஒன்று தான்.

Friday, February 20, 2009

வாழ்க்கையும் கவிதையும்

பெரும்பாலனவர்க்கு
ஆரம்பமே தடுமாற்றம்...

எதை எதையொ
எழுதிவிட எண்ணி
எதிலோ முடிந்துபோயிருக்கும்.

பிறருக்காகவே
சுயம் தொலைத்த
அலங்காரங்கள்.

பாதி படித்தபின்பே
விளங்க ஆரம்பிக்கும்
பொருள்.

பொருள் புரிய
ஆரம்பித்ததும்
மூலம் தேடும் முனைப்பு

ஒவ்வொரு சொல்லும்
ஒரு இயக்கமாய்
ஒன்று சேர்ந்து அதிரும்
அந்த ப்ரம்மம்.

ஞானம்

பார்வையில் ஞானம் வேண்டும்.
பிறையின் கீழே
சிவனின் முகம்.

அற்புதம்

இந்தக் கணம் சாசுவதம்.
இந்தக் கணப்பிறழ்ச்சியில்
என்னுள் நீ
ஊடுருவி நின்றது நிஜம்.
இமைகளுக்குள்ளே
உன்
கண்கள் அசைவது
இந்தப் பிரபஞ்சத்தின்
எல்லா அற்புதங்களையும் விட
மேலானது.

உன் அருகாமையும் அவஸ்தைகளும்

நீ அருகே இருக்கையில்
தெரிவதில்லை
என் நிகழ்காலத்தின் அசைவுகள்.

உன் விழிபார்த்த சிலிர்ப்பில்
உடைந்துபோகிறேன்
அடையாளமில்லாது.

உயிரற்றுப்போன
இந்த வாழ்தலில்
உன் ஞாபகங்களின் பின்னால்
ஓடிக் கொண்டிருக்கிறேன்
ஓய்வில்லாமல்.

பிரபஞ்ச எல்லைகளுக்கப்பால்
ஒரு மாயவெளியில்
உன்னோடு மோகித்துக்கிடக்கும்
என் கனவு.

உன் பார்வைகள்
என் மேல் விழுமென்று
அலையாய் அலையும் மனம்.

பார்க்கும் இடத்திலெல்லாம்
உன் படையெடுப்பு
பிடிபட்ட அடிமையாய் நான்.

எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?
நீ அருகே இருக்கையில்
தெரிவதில்லை
என் நிகழ்காலத்தின் அசைவுகள்.

சொர்க்கமும்,நரகமும்

சொர்க்கமும்,நரகமும்
விண்ணிலும் இல்லை,
மண்ணிலும் இல்லை.
அவை
உன் விழிகளிலும்,
உன் இமைகளிலும்
இருக்கின்றன.

நான்
மௌனத்திலிருக்கும்போதும்
உன் ஞாபகங்கள்
என்னுடன்
பேசிக்கொண்டுதானிருக்கின்றன.

ஒற்றைப் பூ
பூக்கும் நந்தவனம்
உன் கூந்தல்.

சொர்க்கமும்,நரகமும்
விண்ணிலும் இல்லை,
மண்ணிலும் இல்லை.
அவை
உன் விழிகளிலும்,
உன் இமைகளிலும்
இருக்கின்றன.

நான்
மௌனத்திலிருக்கும்போதும்
உன் ஞாபகங்கள்
என்னுடன்
பேசிக்கொண்டுதானிருக்கின்றன.

ஒற்றைப் பூ
பூக்கும் நந்தவனம்
உன் கூந்தல்.

உன் கொலுசு
எனக்கான போர்ப்பறை.

உண்மையில்
கடினமான தவம்
உன் பார்வைகளுக்காக
காத்துக் கிடப்பதுதான்.

மனிதர்களை
வெறுத்தபோது
கடவுள்
என்னைப் படைத்திருக்கிறான்.

நீ
சாதுக்களோடு
போரிட வந்த தேவதை.

மூச்சுவிடும் தூரத்தில்
நீ இருந்தாலும்
நான் சுவாசிப்பதன்
காரணம்
உனக்குத்
தெரியாமலா போயிருக்கும்?

தவமும், வரமும்

நான்
உறைந்து போன கண்ணீர்.

நிலவில்லா
இந்த வானம்
பிடிக்கவில்லை.
நீயில்லா
வகுப்பறை மாதிரி.

இறந்தே பிறந்த குழந்தை
என் வார்த்தை.

கலைத்து விடுவாயென்று தெரிந்தும்
மனதில்
கூடு கட்டுகிறேன்.

பூக்களின் சிலுவை
உன் கூந்தல்.

ஒவ்வொரு மாலையும்
நீ
சூரியனை விரட்டிச் செல்கிறாய்.
உன் நிழலை
இரவென்று
வழிபடுகிறேன்.

கடவுள்
என் நண்பனாய்
இருந்திருக்கலாம்.
ஏனெனில்,
உன் மனது
அவனுக்குத் தெரிந்திருக்கும்.

நான் கனி.
அழுகும் வரை
என்னைத் துளைக்கும்
வண்டு நீ.

காதலின் காதுகளில்
ஓதப்பட்ட மந்திரம்
நான்.
அது உச்சரிக்குமா?
இல்லை மறந்திருக்குமா?

நீ...

ஏதோ
தெரியாமல் பேசிவிட்டேன்
உன்னிடம்!

மௌனங்களை இரசிக்கிற
எனக்கு
உன் பேச்சு
பிரமிப்பாயிருக்கிறது.

ஒரு
புருவ உயர்த்தலிலும்,
ஒரு
உதட்டுச் சுழிப்பிலும்
உன் பேச்சு
உயிர் குடிக்கிறது.

பேசுவதற்கு
ஒன்றுமில்லையென்றாலும்,
ஏதாவது பேசவேண்டும்
என்கிற என் தவிப்பை
என்னால்
தவிர்க்கமுடிவதில்லை.

நீ
என் கை தீண்டியதிலிருந்து
என்
ஆயுள்ரேகை
அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

என்னுள் நிகழும்
எல்லா
இரசமாற்றங்களுக்கும்
உன் பேச்சே
பிரதானமாயிருக்கிறது.

பூமிச் சுழற்சியோடு
சம்பந்தப்படாத
என்
வசந்தகாலச் சேகரிப்பு
உன்னோடு
பேசிய கணங்களாலேயே
நிரம்பியிருக்கிறது.

நீ ...?