Thursday, January 22, 2015

மௌன மொழி

காக்கையின் குரல்
எப்படிப் புரிந்து கொள்வது?
சொல்ல முடியாததை எப்படிச் சொல்வது?
எல்லா மொழிகளும் வீண்!!!

Thursday, January 8, 2015

நிரம்பாத நான்

தன் காதலால் தானே நிரம்பிய மனிதர்
யார் இருக்கிறார் இங்கு?

நான் பூக்களை காதலித்தபோது
முட்களின் கிரீடமே எனக்குக் கிடைத்தது.

ஆனந்த அலைகளில் விளையாட விரும்பிய போது
துயரப் புழுதியில் மட்டுமே துவண்டு தவித்திருந்தேன்.

காதலுக்காய் காதலில் விழுந்த போது
இருதயம் பார்க்க இவளுக்கும் தெரியவில்லை.

கிடைத்த ஆறுதல்களால் இருதயத்தின்
துயரம் இருமடங்காகிப் போனதே உண்மை.

ஒரு நட்பால் கிடைத்த கணத்தில்
இரண்டு நண்பர்கள் விலகிப் போனார்கள்.

ஒரு பைத்தியக் காரனோடு கை கோர்க்க
யாருக்கும் இங்கே நேரமில்லை.

என் நிழல் பார்த்து பயந்ததும்,
என் கண்ணீரின் இரைச்சலில் களைத்துப் போனதும்
என்னை நிரப்பும் முயற்சியின் எழுதாத உண்மைகள்.

இப்படித் தான் வாழ்வது வாழ்க்கை என்றால்
நான் இப்படியே வாழ்கிறேன்.

இனி கதறப் போவது இல்லை ஒருபோதும்.
உதடுகளை தைத்துவிட்டு
உருகும் கண்ணீரை குடித்திருப்பேன்.

இனி எந்த துயரமும்
எனை ஏமாற்ற முடியாது.
துயரங்களுக்காய் தர
இங்கு எதுவுமில்லை என்னிடம்.

தன் காதலால் தானே நிரம்பிய மனிதர்
யார் இருக்கிறார் இங்கு?