உனக்கும் எனக்குமாய்
இடைவெளி இருந்த பொழுதுகளில்
இங்கு எத்தனையோ உலகங்கள்
பிறந்து இறந்திருக்கும்.
உன் கழுத்துக் குழியில்
ஒரு தொட்டில் கட்டித் தந்திருந்தால்
யுகம் யுகமாய்த் தூங்கி இருந்திருப்பேன்
எழுந்திருக்க மனமின்றி!!
உன் விழிகளில் அப்படி என்ன இருக்கிறது?
எத்தனை முறை வேண்டுமானாலும்
விழுந்து தொலைந்து போக
எனக்கு சம்மதம்.
உனைத் தின்று
எனை நிரப்பும் முயற்சி எப்போதும் தோல்வியே!!
பாதி தின்ற பின்
உன் ஒரு பாதியும் என் ஒரு பாதியும்
இறந்து கிடக்கின்றன.
இரண்டு வானவில் பிடித்து
எல்லா நிறங்களும் களைந்து
உதடு சமைத்து
நீ ஒலி எழுப்புகையில்
என் எல்லா உலகங்களும்
அதனுள் ஒடுங்கி போகும்.
உன்னுள் நான் ஒளிந்திருப்பதை
நீ கண் மூடி கவனிக்கையில்
நீயுமற்று, நானுமற்று,
நடுவிலே ஏதுமற்று
போன இடம் உனக்குப் புரிந்திருந்தால்
வா இன்னுமொரு முறை கலவிக்கு!
உன் இருப்பு அறிந்த பின்,
உன் வெறுமை அறிந்த பின்,
நிலவின் முதுகு பார்க்கும் நிதர்சனம் அறிந்த பின்
நீயும் நானும் ஒன்றே என்றிரு
என் அன்பே!!!