உருவாக்கவும் அலங்கரிக்கவும்
எனக்கு நன்றாகவே
தெரிந்திருக்கிறது.
விழிகளின் எல்லைகளை விட்டு
நீ வெளியே போன பின்பு
வேலை ஆரம்பித்து விடுகிறது.
விழி மூடி பார்த்த இருளில்
நீயும் நானும் ஒன்றே
கருவாச்சி.
வெளிச்சம் ஒரு சித்ரவதை.
அது உன்னையும் என்னையும்
வேறு என்கிறது.
உன்னை பிரிந்த கணங்கள் எல்லாம்
என் பிணத்தை நான் இழுத்து நடந்த கொடுமை,
பிரபஞ்சம் பார்த்த சாபம்,
கடவுளின் துயரம்,
கருணையில்லா காலம்,
கண்ணீரின் பருவம்!
அன்பே!
என் தராசுகளில் எடை போட்டால்
எதனையும் மிஞ்ச
உன் தலைமுடி ஒன்று போதும் எனக்கு.
இறைவா!
இறந்து போக முடியாத என்னை
எத்தனை முறை தூக்கிலிடுவாய்
இவளை வைத்து?
ஒன்றை இரண்டாக்கி...
உயிரை வேறாக்கி...
பார்வையில் குருடாக்கி...
என்னை பெண்ணாக்கி...
நீ காட்டும் முறுவல்கள் போதும் எனக்கு!
உனக்கும் சேர்த்தே
காதலிக்கிறேன் இவளை.
உதவிக்கரம் நீட்டு!